TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Sunday, April 29, 2012


B.SC.,(MATHS) DUAL DEGREE - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி தெளிவுரை பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குனரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ஒ.மு.எண். 14436 / சி 3 / இ 1 / 2012, நாள். 24.03.2012 
10+2+3+1 கல்வித் தகுதியுடன் கூடுதலாக பி.எஸ்.சி. கணிதம் ஓராண்டு (இரட்டைப்பட்டம்) முறையில் தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியர் கணிதம் பதவி உயர்விற்கு விதிகளின் படி பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  


http://tnkalvi.blogspot.in/
       

Thursday, April 26, 2012

விம்மி வெடிக்கும் விசும்பல்

ஒரு நாகரிகத்தின் வெற்றி என்பது அந்த நாட்டின் மக்கள்தொகையோ அல்லது வானளாவிய கட்டடங்களோ, மிகப் பெரிய நகரங்களோ அல்லது மிகச் சிறந்த உள்கட்டமைப்போ அல்ல. மாறாக, எப்படிப்பட்ட மக்களை அந்த நாடு உருவாக்குகிறது என்பதில்தான் இருக்கிறது.                          -மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் 

சக ஆசிரியையான உமா மகேஸ்வரியின் மறைவுக்கு என்னுடைய இரங்கலையும், நாகரிக சமுதாயத்தின் வருத்தத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். சமூகத்தின் மனசாட்சியையே புரட்டிப்போட்ட அந்த ஆசிரியையின் தியாகம், தமிழகத்தின் பள்ளிக் கல்விச் சூழலை கடந்த 10 ஆண்டுகாலமாக அக்கறையோடு கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு எந்தவிதமான அதிர்வையும் ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. ஒரு சின்ன மாற்றம். இவ்வளவு நாள்களாக பெற்றோர் மற்றும் பள்ளியின் நெருக்குதலுக்குள்ளாகி மாணவ, மாணவியர்கள்தான் தற்கொலை செய்துவந்தனர். தற்கொலை செய்துகொண்ட மாணவ, மாணவியரின் மேல் ஈவிரக்கம் இல்லாமல் நிர்வாகங்கள் காதல் தோல்வி என்று பழி சுமத்தின.மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பெற்றோர்கள் தவித்தனர். தமிழகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் மாவட்டத்தில் இந்தக் கல்வியாண்டில் மட்டுமே நான்கு தற்கொலைகள் நடந்திருக்கின்றன. வெளியில் வராதது எவ்வளவோ. கடவுள் இவ்வுலகுக்கு அனுப்பிய குழந்தைகளைக் காதல் தற்கொலை என்ற பெயரில் இப்பள்ளிகள் கடவுளிடம் திருப்பி அனுப்பின என்றுதான் நம்மால் வேதனைப்பட முடிகிறது.புதிய பொருளாதாரக் கொள்கை, அதனோடு தொடர்புடைய தொழில்துறை வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி ஆகியவை யார் கண்ணிலும் படாமல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது கல்வித்துறையில்தான். அதுவும் நேரடியாக அல்லாமல் பெற்றோர்களின் மூலமாகக் கடந்த 10 ஆண்டுகாலம் சமூக அளவில் சில நல்ல மாற்றங்களை உருவாக்கியதும் ஒப்புக்கொள்ளக்கூடியதுதான்.சாதிய மோதல்கள் பெருமளவில் நடைபெறவில்லை என்று பெருமை தட்டிக்கொள்ள நினைக்கிறோம். ஆனால், பணம் ஒன்றே சமூக அந்தஸ்தை நிலைநிறுத்தும் காரணியாக முன்னெப்போதும் இல்லாத அளவில் உருவெடுத்திருப்பதை மறந்து விடுகிறோம். பெற்றோரும் பணத்தைச் சம்பாதிக்கும் இயந்திரமாக மட்டும் தங்கள் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவன் ஒரு விருப்பு வெறுப்பற்ற சுயம் பற்றிய பிரக்ஞை இல்லாத மனிதனாக வளர்ந்தால் மட்டுமே தன்னுடைய எண்ணங்கள் ஈடேறும் என்ற பெற்றோர்களின் சிந்தையே.. அவர்களால் முனைந்து வளர்க்கப்பட்ட தனியார் பள்ளிகள். பெற்றோர் மற்றும் கல்வி வியாபாரிகள் கூட்டே அரசாங்கத்தின் ஒவ்வொரு கல்வி சம்பந்தமான அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணம்.மிஷனரிகளும் கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் செய்து வந்த சேவையானது சில தனியார் மற்றும் வியாபாரிகளின் கைக்குப் போய்விட்டது. கல்வி வியாபாரப் பொருளான உடனே வியாபாரத்தின் அத்தனை சட்ட திட்டங்களும் அதற்கு பொருந்திப்போனது. வாடிக்கையாளரின் திருப்தியே கல்வி வியாபாரிகளின் நோக்கமானது. ஆகவே, வாடிக்கையாளரின் சிற்றின்பங்களான தொலைக்காட்சி பார்ப்பது அவற்றின் நெடுந்தொடரில் மூழ்கித்திளைப்பது போன்றவற்றுக்கு வடிகாலாக அமையும் நோக்கில் அந்த நேரத்தில் குழந்தைகளைக் கல்வி என்ற பெயரிலோ அல்லது டியூஷன் என்ற பெயரிலோ கல்விச்சாலையிலேயே அவர்களைப் பிணைவைப்பதும் தொடங்கியது.கல்வி தன் ஆன்மாவை இழந்த குறு வரலாறு இதுதான். இதற்கு தொடர்ந்து வந்த அரசுகளின் கல்விக் கொள்கைகளும் ஒரு காரணமாக அமைந்தன. நுழைவுத் தேர்வு இருந்தாலும் இல்லையென்றாலும் மனப்பாடம் செய்வதில் திறமையிருந்தாலே அந்த மாணவன் பொறியாளராகவே, மருத்துவராகவோ ஆகிவிடலாம். மாணவனின் நுண்ணறிவுக்கான வழியே இல்லாமல் போய்விட்டது. தமிழகத்தின் ஆக்ஸ்போர்டு என்றழைக்கப்படும் ஒரு மாவட்டத்தில்தான் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலிருந்தும் தலைசிறந்த மாணவர்கள் கொண்டு வந்து மற்றும் கொண்டுவரப்பட்டுக் குவிக்கப்படுகின்றனர். இவர்களில் 470 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் கல்விக் கட்டணம் முதல் விடுதிக் கட்டணம் வரை இலவசம். ஏனென்றால், இவர்கள்தான் கல்வி வியாபாரத்தின் முதலீடு.இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட 60 முதல் எழுபது மாணவ, மாணவியரில் ஒருவர் மாநில அளவில் மதிப்பெண் எடுத்துவிட்டால் அடுத்த வருடம் விளம்பரம் சூடுபிடிக்கும். ஏதோ ஒரு வருடம் ஒரு சாதனை படைத்தாலே தொடர்ந்து பல வருடங்கள் அதையே ஒவ்வொரு வருடமும் விளம்பரப்படுத்தி சேர்க்கை நடைபெறுகிறது.இந்த மாணவர்களின் பள்ளி நேரம் ஏறக்குறைய காலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 10.30 வரை நெடுந்தொடர்போல் முடிவில்லாமல் நீளும். இடைவேளையில் கழிப்பறைக்குச் செல்லலாம். சக மாணவரிடம் பேசலாம், ஆனால், சிரித்தால் குற்றம். இதேபோல் இங்குள்ள பல இரு பாலர் பள்ளிகளில் ஒரு பாலர் மற்றொரு பாலரைப் பார்க்கவே முடியாது, இன்னும் சில பள்ளிகளில் ஒரு வகுப்பறையில் இரு பாலர் இருந்தாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேச அனுமதிக்கப்படுவதில்லை.இன்றைய தமிழகச் சூழலில் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கருத்தாக்கம் இரு பாலர் பள்ளி பற்றியது. நான் நீலகிரி மாவட்டத்தில் மேல்மட்ட மாணவ, மாணவியர் மட்டுமே படிக்க சாத்தியப்பட்ட ஒரு பள்ளியில் பணிபுரிந்தபோது ஒரு பிப்ரவரி மாதத்தில் பள்ளி ஆண்டுத் தேர்வுக்கு 10 நாள்களே இருக்கும் நேரத்தில் மாணவ, மாணவியரின் பையை திடீரென சோதனை செய்து ஆட்டோகிராப் புத்தகங்களைக் கைப்பற்றினர். அதில் மாணவ-மாணவியர் தங்கள் ஞாபகங்களை எழுதி இறுதியில் (அதாவது அன்புடன்) என்று கையொப்பமிட்டிருந்தனர்.அதைப் பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியை எந்த அர்த்தத்தில் அந்த வார்த்தை எழுதப்பட்டது என்பதைகூடப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் மாணவிகளை அடிக்கத் தொடங்கினார். எத்தனை பேரை காதலிக்கிறாய் எனக் கேட்டார். பிறகு ஆட்டோகிராப் புத்தகங்களை நெருப்பிலிட்டார். இவை மாணவ, மாணவியரின் பரீட்சையில் பாரதூரமான விளைவை ஏற்படுத்தியது. 56 வயதான அந்த தலைமையாசிரியையின் முதிர்ச்சியின்மை மாணவியின் பள்ளிக்கால ஆட்டோகிராபைதான் பார்த்தது. அதன் பின்னணியில் இருந்த நட்பைப் புரிந்துகொள்ளவில்லை.காலை 5.30-க்கு "ஸ்டடி' என்ற பெயரில் தொடங்கப்படும் கல்வி சுமார் 7 மணிக்கெல்லாம் பாடவேளைக் கல்வியாகிவிடும். ஏனென்றால், பெரும்பாலான பள்ளிகள் அரசு ஆசிரியர்களின் கூட்டாண்மையில்தான் நடக்கிறது. ஆகவே, காலையில் இவர்கள் மற்றும் இவர்கள் நண்பர்கள் இங்கு வேலை பார்த்து முடித்துவிட்டு அரசுப் பள்ளியில் ஒப்பமிட்டு ஒப்புக்குப் பணிபுரிந்து மாலை மீண்டும் தனியார் பள்ளிக்குப் பாய்ந்து சென்று 5.30 முதல் இரவு 9.30 வரை வேலைபார்த்துத் தங்கள் அக்கறையை நிரூபிப்பர்.சப்ஜெக்ட் எக்ஸ்பெர்ட் என்ற பெயரில் உலவும் இந்த ஆசிரியர்களின் நிபுணத்துவம் புத்தகத்தையும், பழைய கேள்வித்தாளையும் மனப்பாடம் செய்து வைத்திருப்பது மட்டும்தான்.இவ்வாறு மூன்று தனியார் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியராகச் செயல்படும் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர் கடந்த வருடம் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதைப் பெற்றுப் பள்ளிக் கல்வித் துறைக்கு தீராத களங்கத்தையும் ஏற்படுத்தினார். இவ்வாறு மாநிலத்தில் முதல் மதிப்பெண்கள் எடுத்த பள்ளிகளால் நிறைந்திருக்கும் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் உதவி ஆசிரியர்களாகத்தான் பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் செயல்பட முடிகிறது. டாப் செக்ஷன் எனப்படும் 2 வகுப்புகளில் மட்டும்தான் பாடம் எடுக்கும் ஆசிரியர் விடைத்தாள்களைத் திருத்துவார். மற்ற மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கென்றே தனி ஆசிரியர்களும், பரீட்சை நடத்துவதற்கும் தனி ஆசிரியர்கள் உள்ளனர்.இவ்வாறான பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள் இடையில் பணியை விட்டு விலகவும் முடியாது. கல்வித்துறையில் புகார் அளிக்கவும் முடியாது. ஏனென்றால் அரசு அலுவலகர்கள் மற்றும் ஆசிரியர்களால் நிரம்பி வழியும் இந்தப் பள்ளிகளின் நிர்வாகத்தின் கரங்கள் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் முதல் முதன்மைக் கல்வி அலுவலகம் வரை நீண்டு பயமுறுத்தும். எந்தவிதமான தொழிற்சங்க நெறிமுறைகளுக்கும் உட்படாமல் தொழிலாளர் நல சட்டதிட்டங்களையும் தாண்டி மிக மோசமான அடக்குமுறைகளுக்கு உள்பட்டு இப்பள்ளிகளில் கொத்தடிமைபோல் செயல்படும் ஆசிரியர்கள் ஏராளம்.இன்னும் பல ஆசிரியர்கள் பணியில் சேரும்போது அளித்த சான்றிதழ்களைப் பெறவே பல நூறு தடவை பள்ளிக்கு நடக்கும் அவலமும் இம்மாவட்ட பள்ளிகளில் அதிகம். இப்பள்ளிகளில் சேரும்போது ஒப்படைக்கும் சான்றிதழ்களை வேலையை ராஜிநாமா செய்தால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம்தான் கொடுப்பார்கள்.சுமார் 4,000 மெட்ரிக் பள்ளிகளைக் கவனிக்க வெறும் 16- ஐஎம்எஸ் (மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களே) உள்ளனர். முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுப் பள்ளிகளின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கே நேரம் போதவில்லை. மேலும் அலுவலகத்திலே தனியார் பள்ளிகளின் தாக்கம் பலமாக இருக்கிறது.பெரும்பாலான தனியார் பள்ளிகளில் முதல்வர் பதவி என்பதே ஏவலாளி பதவியாகத் தான் கருதப்படுகிறது. அவரது பணி ஆசிரியர்களைத் திட்டுவது, தாளாளர்களுக்கு வணக்கம் போடுவது, எப்போது அவர் சுய சிந்தனையை வெளிப்படுத்துகிறாரோ அப்போது அவர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுவார். பெரும்பான்மையான தனியார் பள்ளிகளில் முதல்வர்கள் பெரும் அடையாள நெருக்கடியில்தான் நாட்களை நகர்த்துவர். முதல்வர்கள் நிலையே இப்படியென்றால் ஆசிரியர்களின் நிலையோ பரிதாபம்.காலை முதல் இரவு வரை வேலை அழுத்தத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆசிரியரால் தினசரி பத்திரிகைகூட படிக்க நேரம் கிடைக்காது. எப்படி அவர் பொது அறிவை வளர்ப்பார்? ஆசிரியப்பணி பற்றிய தரிசனம் எப்படி கிடைக்கும்? இந்த ஆசிரியர்களால் எவ்வாறு எதிர்கால இந்தியாவை செதுக்க முடியும்? செய்முறை பயிற்சியிலிருந்து விளையாட்டு வகுப்புவரை எந்தச் சிரத்தையுமில்லாமல் வெறும் மதிப்பெண் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பள்ளிகள் ஒரு வரைமுறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். ஏனென்றால், இப்பள்ளிகளால்தான் மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கிறது.குழந்தைகள் மதிப்பெண் பெறுவது மட்டுமே தங்களுக்கு மதிப்பு என்று கருதும் பெற்றோர்களின் மனோபாவம் மாற வேண்டும். அவர்களால்தான் மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கிறது.சட்டமும் திட்டமும் போட்டால் மட்டும் போதாது. தயவுதாட்சண்யமில்லாமல் மாணவர்களின் வருங்காலத்தைக் கருத்தில்கொண்டு அதிகாரிகள் முறையாகச் செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவையெல்லாம் ஒரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வராக இருக்கும் ஒருவரின் விம்மி வெடிக்கும் விசும்பல்!
கட்டுரையாளர்: கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்-நாமக்கல்.

தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளைக் களைய, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தலைமையில், ஒன்பது பேரை உறுப்பினர்களாக நியமித்து, தமிழக அரசு உத்தரவு

தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளைக் களைந்து, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தலைமையில், ஒன்பது பேரை உறுப்பினர்களாக நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இக்குழு, தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளை கண்டறிந்து, தேவையான மாற்றங்களை கொண்டு வர, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும். பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி தலைமையில், ஒன்பது பேர் உறுப்பினர்களாக வல்லுனர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். குழுவின் பணிகள்:

* ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டங்களில் உள்ள குறைகளைக் கண்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை, அரசுக்குப் பரிந்துரை செய்தல்.

* தரமான கல்வியை அளிப்பதற்காக, பள்ளிகளுக்கு தேவைப்படும் இன்றியமையாத கட்டமைப்பு வசதி, தளவாட வசதி, உபகரணங்கள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்குப் பரிந்துரை அளித்தல் வேண்டும்.

* மேம்படுத்தப்பட்ட கல்வி முறைக்கு ஏற்ப, தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களை செய்ய, பரிந்துரை செய்ய வேண்டும்.

* அனைத்துப் பள்ளி செயல்பாடுகளையும் மேம்படுத்த, பள்ளி ஆய்வு முறைகளில்

தேவைப்படும் மாற்றங்களை பரிந்துரை செய்யும். மேலும், தேவையான இதர பரிந்துரைகளையும் வல்லுனர் குழு அரசுக்கு அளிக்கும்.

* குழுவின் செயல்பாடுகளுக்கு தேவையான அனைத்து செலவுகளையும், மாநில கல்வியியல் ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.

வல்லுனர் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் விவரம்:
பெயர் பதவி
1. என்.ஆர்.சிவபதி, பள்ளிக்கல்வி அமைச்சர் குழுத் தலைவர்

2. டி.சபீதா, பள்ளிக்கல்வி செயலர் உறுப்பினர்

3. பாலகுருசாமி, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர்    உறுப்பினர்

4. முனைவர் பாலசுப்பிரமணியன், துறைத் தலைவர் (ஓய்வு), கல்வியியல் துறை, சென்னை பல்கலை உறுப்பினர்

5. முனைவர் எஸ்.சுவாமிநாதப்பிள்ளை, முன்னாள் இயக்குனர், பாரதியார் பல்கலை உறுப்பினர்

6. முனைவர் ஜி.பாலசுப்பிரமணியன், சி.பி.எஸ்.இ., முன்னாள் இயக்குனர் உறுப்பினர்

7. முனைவர் சி.சுப்பிரமணியம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் உறுப்பினர்

8. மணி, பள்ளிக்கல்வி இயக்குனர் உறுப்பினர்

9. சங்கர், தொடக்கக் கல்வி இயக்குனர் உறுப்பினர்

10. தேவராஜன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் உறுப்பினர்-செயலர்.

Wednesday, April 25, 2012

தனியார்மயத்தைக் கொழுக்க வைக்கும் கல்வி பெறும் உரிமைச்சட்டம்!

2009ஆம் அமைந்த காங்கிரசு தலைமையிலான இரண்டாவது ஐக்கிய முன்னணி அரசாங்கம், தனது தேர்தல் வாக்குறுதிளில் ஒன்றான கல்வி பெறும் உரிமைக்கான சட்டத்தை ஏப்ரல் 1, 2010 அன்று அமலுக்குக் கொண்டு வந்தது. 6 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி பெறும் உரிமையை உத்தரவாதம் செய்வதாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு கடந்த நவம்பர் 8ம் தேதி வெளியிட்டது.
’தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும்’ என்பது இந்த சட்டத்தின் முக்கியமான அம்சம். இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்படும் ஏழைக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே சம்பந்தப்பட்ட பள்ளிக்குக் கொடுத்து விடுமாம். இப்படி மக்கள் நலனுக்காக தனியார் பள்ளிகள் மீது கட்டுப்பாடு விதிக்கும் சட்டமாக இது சித்தரிக்கப்படுகிறது. ’அரசுப் பள்ளிகள் தரம் குறைந்தவை, தனியார் பள்ளிகள்தான் உயர்தரக் கல்வி தர முடியும்’ என்ற பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வழி செய்து தருகிறது என்ற வகையிலும் இது கவர்ச்சிகரமான நடவடிக்கையாக காட்டப்படுகிறது.
தனியார்மயத்தை ஆதரித்துவிட்டு, ஆரம்பக் கல்வி அடிப்படை உரிமையாம் - இந்திய அரசு விளம்பரம்தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை ரவிராஜ பாண்டியன் கமிட்டி நிர்ண்யித்துக் கொடுத்த பிறகு, அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போன முதலாளிகள், அப்பரிந்துரைகளை குப்பைத் தொட்டியில் வீசி விட்டு தம் விருப்பப்படி கட்டணக் கொள்ளை அடிக்கின்றனர். அதைத் தடுக்க முடியாத ஆட்சியாளர்கள் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க தனியார் பள்ளிகளை கட்டாயப்படுத்துவதற்கு சட்டம் கொண்டு வந்திருப்பதாக சொல்லும்போது அதை கவனமாக அலசிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
1947க்குப் பிறகு இலவச தாய்மொழி வழிக்கல்வி தருவதற்காக அரசு பள்ளிகள் கிராமம் தோறும் தொடங்கப்பட்டன. பல குற்றம் குறைகளுடன் இயங்கினாலும், எல்லாக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி, அனைவருக்கு ஒரே மாதிரியான கல்வி என்ற நோக்கத்தை அவை நிறைவேற்றின. 1980களுக்குப் பிறகு மெட்ரிகுலேசன் பள்ளிகள் என்ற பெயர்ப்பலகையுடன் தனியார் பள்ளிகள் காளான்கள் போல முளைத்தன. லாபம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளிகளில் பலவற்றுக்கு சரியான கட்டிட வசதிகள் கிடையாது, தகுதியுள்ள ஆசிரியர்கள் கிடையாது.
ஆனால், அரசுப் பள்ளிகளின் நிர்வாகம் அடுத்தடுத்த அரசுகளின் புறக்கணிப்பின் மூலம் சீரழிக்கப்பட்டு அரசுப் பள்ளிகள் என்றால் தரம் குறைந்தவை, தனியார் பள்ளிகள் மூலம் ஆங்கில வழிக் கல்வி பயில்வதுதான் சிறந்தது என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. இதனால் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவது என்பது மக்கள் மீது பெருத்த சுமையாக மாற்றப்பட்டிருக்கிறது. உழைக்கும் மக்கள் கூட பல ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுப்புவதை நகர்ப்புறங்களில் பார்க்க முடிகிறது.
இப்படிப்பட்ட நிலையில் அரசுப் பள்ளிகளின் நிர்வாகத்தை மேம்படுத்தி, தேவைப்படும் இடங்களில் புதிய பள்ளிகளைத் திறந்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, எல்லாக் குழந்தைகளுக்கும் தாய்மொழி வழியில் தரமான கல்வி வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதுதான் நியாயமான திட்டமாக இருக்க முடியும்.  ஆனால் இப்போது நடைமுறைப்படுத்தப்படும் கல்வி பெறும் உரிமைச் சட்டம், இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகளை சரி செய்து எல்லாக் குழந்தைகளுக்கும் சமமான கல்வி வழங்கும் திசையில் போகவில்லை என்பதோடு, ஏற்றத் தாழ்வுகளை இன்னமும் கெட்டித்துப் போக வழி செய்கிறது. கல்வியை வணிகமயமாக்கி லாபம் சம்பாதிக்கும் நடவடிக்கையாக மாற்றும் தனியார்மயப் போக்கை இந்தச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கப் போவதில்லை. மாறாக கல்வி தனியார்மயம் என்ற எதார்த்தத்தை அங்கீகரித்து, அதற்கேற்ப மாறிக்கொள்ளுமாறு மக்களுக்கு இது அறிவுருத்துகிறது.
தனியார்மயத்தை ஆதரித்துவிட்டு, ஆரம்பக் கல்வி அடிப்படை உரிமையாம் - இந்திய அரசு விளம்பரம்
படம் - thehindu.com
தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் 5,255 தனியார் ஆரம்பப் பள்ளிகளில் சுமார் 11 லட்சம் மாணவர்களும், 1,716 தனியார் நடுநிலைப் பள்ளிகளில் சுமார் 8 லட்சம் மாணவர்களும் படிக்கிறார்கள். 8ம் வகுப்பு வரையிலான மொத்த மாணவர்களில் சுமார் 29% இந்த தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் கட்டணங்களைக் கட்டுப்படுத்தி அவற்றின் நிர்வாகத்தை ஒழுங்கு படுத்த வகை செய்யவும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் முன்வராத இந்த சட்டம், அரசு பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து ஆரம்பப் பள்ளிக் கல்வியை மேலும் மேலும் தனியார் கைகளில் விடுவதற்கான நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக, அரசு உதவி பெறும் பள்ளிகள், கேந்திரீய வித்யாலயா/நவோதயா போன்ற சிறப்புப் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் என்று பல அடுக்குகளாக இருக்கும் பள்ளிக் கல்வி முறையை அங்கீகரித்து பள்ளிக் கல்வியில் இருக்கும் வசதி படைத்தவர்களின் குழந்தைகளுக்கும் ஏழைகளின் குழந்தைகளுக்கும் இடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை தொடர்ந்து பராமரிக்க வழி செய்கிறது.
இரண்டாவதாக, எல்லாக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி கிடைக்கும் என்று சட்டத்தில் குறிப்பிடப்படவேயில்லை.
தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது தனியார் கல்வி முதலாளிகளுக்கு கட்டாயம் ஏற்படுத்துவது போல தோன்றினாலும் ஏற்கனவே பல்கி பெருகி விட்ட தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் அங்கீகாரம் அளித்து கணிசமான அரசு நிதியையும் திருப்பி விடுவது இதன் முக்கியமான பணியாக இருக்கப் போகிறது.  அரசுப் பள்ளிகள் தரம் குறைந்தவை என்று கருதப்படும் சூழ்நிலையில் ஏழை மக்கள் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் தமது குழந்தைகள் தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதை பெரிய சலுகையாக நினைப்பார்கள். அதன் மூலம் அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவது இன்னும் தீவிரமாகி அவை முற்றிலும் ஒழிக்கப்படும் சூழ்நிலை உருவாக்கப்படும்.
மூன்றாவதாக குழந்தைகளுக்கு ஆறு வயது வரையிலான இளநிலைக் கல்வி, 14 வயதுக்குப் பிறகான உயர்கல்வி தொடர்பான தனது பொறுப்பை முற்றிலும் கைகழுவி விடும் நோக்கத்தையும் இந்தச் சட்டத்தின் மூலம் அரசு வெளிப்படுத்தியிருக்கிறது.  உயர்கல்விக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்ய முடியாத ஏழை மாணவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக வேலைச் சந்தையில் விடப்படுவார்கள்.
இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்குவது குறித்து ‘அடுத்த 5 ஆண்டுகளில் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து எவ்வளவு நிதி திரட்ட முடியும் என்று அவர்கள் சொன்னால், அதற்கேற்ப அவர்களுக்கு கூடுதல் சுயநிர்வாக உரிமை தருவோம்’ என்று மனித வளத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார்.  அதாவது உயர் கல்வி நிறுவனங்கள், தமக்கு நிதி வழங்கும் தனியார் நிறுவனங்களின் விருப்பப்படி செயல்படவிருப்பதைத்தான் தன்னாட்சி என்று சித்தரிக்கிறது அரசு.
“உழைக்கும் வர்க்கத்தினருக்கு அவர்களது வாழ்க்கை நிலைக்கு மேற்பட்ட கல்வி அளிக்கப்படக் கூடாது” என்று 19ம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசு கடைப்பிடித்த கொள்கை கூறுகிறது. உழைக்கும் மக்களைப் பொருத்தவரை தற்போதைய சட்டமும் நடைமுறையில் பத்தொன்பதாம் நூற்றாண்டை நோக்கிய பயணமாகவே இருக்கும்.
நான்காவதாக, தனியார் பள்ளிகள் தமது விருப்பப்படி தன்னிச்சையாக நிர்வாகம் செய்து கொள்ளவும், கட்டணங்கள் நிர்ணயித்துக் கொள்ளவும் எந்தத் தடையும் இருக்கப் போவதில்லை. இப்போது இருப்பதைப் போலவே பெற்றோர் பள்ளி நிர்வாகத்துக்கு அஞ்சி நடுங்கி கேட்ட தொகையைக் கட்டி கல்வியை வாங்குவது நடைமுறையாக தொடரும்.  ’தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் பள்ளிக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள், மத்திய அரசின் கல்வி பெறும் உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்னர் செல்லாமல் போய் விடும்’ என்று கபில் சிபல் தனியார் பள்ளி உரிமையாளர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
மெட்ரிக் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க சட்டம் நிறைவேற்றப் பட்டாலும், அவற்றை விட பல மடங்கு அதிகமான கட்டணங்களை அந்த பள்ளிகள் வசூலித்துக் கொண்டிருப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அப்பல்லோ மருத்துவமனைக்கு போக முடிவதை மகிழ்ச்சியாக கருதும் மக்கள் அந்த மருத்துவமனை காப்பீடு மூலம் பெறும் பணத்துக்கும் மேல் கூடுதலாக கேட்பதை ’மனமுவந்து’ கட்டி விடுவதைப் போல,  குழந்தையின் கல்விக்கான கூடுதல் நன்கொடையை சுமக்கவும் மக்கள் தயாராகிக் கொள்ள வேண்டியிருக்கும்.
25% இடங்களை ஏழைகளுக்கு ஒதுக்கீடு செய்யும் சுமையைத் தாங்கிக் கொள்வதால் கூடுதல் கட்டணம் விதிக்க வேண்டியிருக்கிறது என்ற ’தார்மீகக்’ கடமையை தனியார் பள்ளிகள் ‘சுமப்பதால்’, அவர்கள் விதிக்கும் கட்டணங்களை சட்ட ரீதியாகவோ, தார்மீக ரீதியாகவோ தட்டிக் கேட்கும் உரிமை யாருக்கும் இல்லாமல் போய் விடும்.
ஐந்தாவதாக, இந்தச் சட்டம் 60 குழந்தைகளுக்குக் குறைவாகப் படிக்கும் சுமார் 40% ஆரம்பப் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர், இரண்டு வகுப்பறை முறை தொடர்ந்து நிலவுவதை மாற்றப் போவதில்லை என்று தெரிகிறது. அரசு ஒப்பந்த முறையில் தற்காலிக, பயிற்சியளிக்கப்படாத, துணை ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளவும் இந்தச் சட்டம் வழி செய்கிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் வேலை, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நிவாரணப் பணிகள் போனவற்றுக்கு அனுப்புவதற்கு இடம் அளிக்கிறது. தனியார் பள்ளியில் குழந்தைகளுக்கு தினமும் பாடம் நடக்கும் போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இப்போது இருப்பது போலவே அவ்வப்போது மட்டும் பாடம் நடப்பது தொடரும். பிஎட் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் திறமை பற்றி சட்டம் எந்த வரையறையும் செய்யவில்லை.
ஆறாவதாக, குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவை என்று கல்வியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தாய்மொழி வழிக் கல்வி வழங்குவதிலிருந்து தன்னை முழுவதும் விடுவித்துக் கொள்ளும் முகமாக ’சாத்தியமான சூழ்நிலைகளில் மட்டும் தாய்மொழி வழிக் கல்வி வழங்கப்பட்டால் போதும்’ என்று சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆங்கில வழிக் கல்வி என்ற மாயையின் மூலம் கல்வி வியாபாரிகள் பணம் சம்பாதிப்பதை தொடர்ந்து ஊக்குவித்து, குழந்தைகள் தாய்மொழி வழி கற்பதற்கு இருக்கின்ற வாய்ப்புகளும் ஒழிந்து விடும்.
கல்வி பெறும் உரிமைச்சட்டம் (RTE) மாபெரும் மோசடி
தனியார்மயத்தை ஆதரித்துவிட்டு, ஆரம்பக் கல்வி அடிப்படை உரிமையாம் - இந்திய அரசு விளம்பரம்
வர்த்தகம் தொடர்பான சேவைகள் குறித்த பொது ஒப்பந்தத்தின் (General Agreement on Trade Related Services) கீழ் கல்வி, சில்லறை வணிகம், வழக்கறிஞர்கள் பணி, குடிநீர் வழங்குதல், குப்பை அள்ளுவது, தொலைபேசித் துறை, தபால் துறை, மருத்துவத் துறை என்று பல சேவைகள் வணிகம் சார்ந்த சேவைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. அந்தத் துறைகளில் தலையிட்டு சுதந்திரச் சந்தையின் செயல்பாட்டை பாதிக்க அரசுக்கு உரிமை இல்லை. இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ள இந்திய அரசுக்கு கல்வி உள்ளிட்ட சேவைத் துறைகளை தனியார் சந்தைப் போட்டிக்கு திறந்து விடப்பட வேண்டும் என்ற பன்னாட்டு கடமை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகள், மக்கள் போராட்டங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்துக் கொள்ளலாமே தவிர அரசு புதிய மருத்துவமனை கட்டுவதோ, பள்ளி கட்டுவதோ, மருந்து செய்வதோ முற்றிலும் நிறுத்தப்பட்டு தனியார் மயமாக்கப்பட்டே தீர வேண்டும்.
உயர் கல்வியையும் தொழிற்கல்வியையும் விற்பனை பண்டமாக மாற்றுவதற்கான ஒரு பரிந்துரையை நமது அரசாங்கம் உலக வர்த்தக நிறுவனத்திடம் சமர்ப்பித்திருக்கிறது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட இருக்கிறது. சந்தைக்கு ஆதரவாக செயல்படும் அரசுகள் ’மெரிடோகிரசி’ மூலம் ஈவு இரக்கமில்லாத கழித்துக் கட்டலை மக்களிடையே செயல்படுத்த முனைகின்றன. மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து உதவிக் கொள்வது என்பது சந்தை போட்டி சூழ்நிலையில் நடக்க முடியாத ஒன்று.
தனியார்மயத்தை ஆதரித்துவிட்டு, ஆரம்பக் கல்வி அடிப்படை உரிமையாம் - இந்திய அரசு விளம்பரம்கல்வி பெறும் வாய்ப்புகளை ஜனநாயக முறைப்படி செயல்படுத்தினால் கல்வி விலைபொருளாக இருக்க முடியாது. ஆனால், மூலதனம் தன்னைத்தானே இயற்கையானதாகவும், சுதந்திரமானதாகவும், ஜனநாயகபூர்வமானதாகவும் காட்டிக் கொள்கிறது. சுதந்திரச் சந்தை அடிப்படையிலான முதலாளித்துவத்தின் மீது வைக்கப்படும் எந்த விமர்சனத்தையும் ஜனநாயக விரோதமானது என்று முத்திரை குத்தவும் செய்கிறது. சந்தைப் போட்டி, தனியார் மயமாக்கம், தரம் குறைந்த பொதுத் துறை சேவைகள், பணம் படைத்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே ஏற்றத் தாழ்வுகள் எல்லாமே நியாயமானவை, இயல்பானவை என்று மக்களை நம்ப வைக்க வேண்டியிருக்கிறது.
கல்வி நிலையங்கள் வழியாக அரசாங்கம் முதலாளித்துவத்தை இயற்கையானதாக காட்ட முயற்சிக்கிறது. சந்தையின் தேவைகளுக்கு அப்படியே பொருந்தும் மனிதர்களை உருவாக்குவதே மூலதனத்தின் தேவையாக இருக்கிறது. அறிவியல் பூர்வமான சிந்திக்கும் திறனுக்குப் பதிலாக வணிக நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட கால கட்டத்தில் தேவைப்படும் திறன்களை வழங்குவதே கல்வியின் வேலையாக திட்டமிடப்படுகிறது. நியோ லிபரல் பொருளாதாரவாதிகள் இளைஞர்களை சந்தையில் வேலை செய்யத் தேவைப்படும் விலைபொருளாக ஒரு பக்கமும், சந்தையில் விற்கப்படும் பொருட்களை வாங்கும் நுகர்வோர்களாக இன்னொரு பக்கமும் பார்க்கிறார்கள். இந்த இரண்டிலும் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் அவர்கள்  ஒரு சமூகப் பிரச்சனையாக மாறி விடுகிறார்கள்.
10% மக்களை மட்டும் ஆரோக்கியமாகவும், அறிவுள்ளவர்களாகவும், பணக்காரர்களாகவும் வைத்திருப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மன்மோகன், சோனியா கும்பல் அமெரிக்க/பன்னாட்டு ஏகாதிபத்தியங்களின் வழிகாட்டலில் செய்து வருகின்றார்கள். அத்தகைய முதலாளித்துவ சொர்க்கத்தில் பெரும்பான்மை மக்கள் அவர்களுக்கென ஏற்படுத்தப்பட்ட கருணை இல்லங்களில் வசித்து, தர்ம பிரபுக்கள் மனமுவந்து போடும் கஞ்சியைக் குடித்துக் கொண்டு, வாய்ப்புக் கிடைக்கும் போது கிடைத்த வேலையைச் செய்து முடித்து விட்டு மீண்டும் இல்லங்களுக்குத் திரும்பி விடுவது மட்டுமே விதியாக இருக்கும்.

நன்றி ; வினவு  http://www.vinavu.com/

ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் அகல்விளக்கு



சென்ற நூற்றாண்டில் எத்தனையோ பேராசிரியர்கள் பணிபுரிந்தார்கள்; ஓய்வு பெற்றார்கள்; மறைந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் இன்று நினைவுகூரப்பட்டுப் போற்றப்படவில்லை. ஒரு சிலரே மறைந்தும் மறையாமல் வாழ்கிறார்கள். அவர்களில் சிலரை மாணவர்கள் மட்டும் நினைவுகூர்கிறார்கள்; மிகச் சிலரையே எல்லோரும் நினைந்து போற்றுகிறார்கள். அத்தகைய மிகச் சிலருள் ஒருவரே பேராசிரியர் மு.வ.இருபதாம் நூற்றாண்டு கண்ட நிகரற்ற பேராசிரியர் டாக்டர் மு.வ. என்பது வரலாற்று உண்மை. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மு.வ. என்னும் இரண்டெழுத்து, தமிழ் மக்களிடையே, குறிப்பாக மாணவர்களிடையே ஒலித்த இரண்டெழுத்து மந்திரம் ஆகும். வட ஆர்க்காடு மாவட்டத் திருப்பத்தூரில் பிறந்த மு.வ. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு அங்கேயே வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியைத் தொடங்கினார். தனியே படித்துப் புலவர் தேர்வில் மாநிலத்தில் முதல்வராகத் தேர்ச்சி பெற்று, அவ்வூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகி, பின் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்து, பேராசிரியராக உயர்ந்து, சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியராகத் திகழ்ந்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஒளிர்ந்து புகழின் உச்சியில் மறைந்தார். அவரது வாழ்வு எளிய குடும்பத்தில் பிறந்து ஆர்வத்தாலும் உழைப்பாலும் படிப்படியாக உயர்ந்து முன்னேற்றம் கண்ட பெருவாழ்வு நேரிய வாழ்வு.ஆசிரியர்கள் மூன்று வகை. சிலர் மாணவர்களைப் பகைவர்களைப்போல் நினைப்பார்கள். இவர்கள் மாணவர்கள் செய்யும் சிறு தவறுகளைக்கூடத் தாங்கிக்கொள்ளாமல் தண்டிப்பார்கள். சிலர், மாணவர்களைத் தங்களிடம் பாடம் கற்க வந்தவர்களாக மட்டும் கருதுவார்கள். இவர்கள் பாடத்தை மட்டும் கற்பித்து மாணவர்களைத் தேர்வுக்கு ஆயத்தம் செய்வார்கள். சிலர் மாணவர்களைத் தங்கள் மக்களாகக் கருதி, எல்லா வகையிலும் துணை நிற்பார்கள். இவர்களே மாணவர்களை வாழ்வாங்கு வாழத்தக்கவர்களாக உருவாக்குபவர்கள். இவற்றில் இறுதிவகையைச் சேர்ந்தவர் பெருந்தகை மு.வ. அவர் மாணவர்களுக்குப் பாடம்சொல்லும் ஆசிரியராக மட்டுமன்றி ஆதரவு நல்கும் தந்தையாகவும் திகழ்ந்துள்ளார். அவர்கள் குடும்பச் சூழல்நிலையை அறிந்து அதற்கேற்ப அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் புரிந்துள்ளார். மறைந்த பேராசிரியர் பொன். செüரிராசன் போன்ற எளிய மாணவர்களைத் தம் வீட்டிலேயே தங்கச்செய்து உணவும் தந்து படிக்க வைத்துள்ளார். மறைந்த பேராசிரியர் ப. இராமன் போன்ற சிலருக்கு விடுதிக்கட்டணமும் வேறு சிலருக்குக் கல்லூரிக் கட்டணமும் கட்டி உதவி புரிந்துள்ளார். இவ்வுதவிகளை எல்லாம் அடுத்தவருக்குத் தெரியாமலே செய்துள்ளார். மாணவர்கள் நல்வாழ்வுக்காகப் பல்கலைக்கழகத்தோடு போராடியுள்ளார். அவர் ஆசிரியப் பணியைத் தாம் வாழ்வதற்கான பணியாக மட்டும் கருதாமல் மாணவர்களை வாழ்விக்கும் பணியாகக் கருதி அரும்பாடுபட்டுள்ளார். பெரும்பாலும் கல்லூரி முடிந்ததோடு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே இருந்த தொடர்பு அறுந்து போய்விடுகிறது. அதன்பின்பு அவர்கள் யாரோ, இவர்கள் யாரோ. ஆனால் மு.வ. மாணவர்களோடு கொண்டிருந்த தொடர்பு கல்லூரிப் படிப்பு முடிந்த பின்பும் வளர்ந்து, வாழ்நாள் உறவாக நிலைபெற்றுள்ளது. அவர் பலருக்கு வேலை தேடும் முயற்சியில் உதவியுள்ளார்; வீடு கட்டுவதற்குப் பணம் கொடுத்து உதவியுள்ளார்; பலரை நூல்கள் எழுதச் செய்து, அவற்றைப் பாடநூல்களாக வைத்து வருவாய்க்கு வழிசெய்துள்ளார். வாழ்க்கைச் சிக்கல்களுக்குக் கடிதங்கள் எழுதி வழிகாட்டியுள்ளார். அவர் அளவுக்குத் தம் மாணவர்களுக்குக் கடிதம் எழுதிய பேராசிரியர் மற்றொருவர் இல்லை என்றே சொல்லலாம். அவர் மாணவர்களை மதிப்போடு நடத்தியவர். தம் நாவல்கள் குறித்து மாணவர்கள் சிலரிடம் விவாதம் செய்துள்ளார். படிக்கக் கொடுத்துக் கருத்துக் கேட்டுள்ளார். தம் முதலணி மாணவர் ம.ரா.போ. குருசாமியின் கருத்தை ஏற்று, நாவலுக்கு வைத்திருந்த முருங்கைமரம் என்ற பெயரைச் "செந்தாமரை' என்று மாற்றிக்கொண்டார். ஒரு சிறுகதைக்கு அவர் தெரிவித்த "விடுதலை' என்னும் தலைப்பையொட்டி "விடுதலையா?' என்று பெயர் சூட்டியுள்ளார். மேலும், நான்கு நாவல்களுக்குத் தம் முதல்அணி மாணவர்கள் நால்வரையும் ஒவ்வொரு நாவலுக்கு அணிந்துரை எழுதச் சொல்லி அவர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார்.மற்றப் பேராசிரியர்களெல்லாம் தமிழைப்பற்றி மட்டும் சிந்தித்துக்கொண்டிருந்தபோது அவர் ஒரு படி மேலே சென்று தமிழர்களைப் பற்றியும் சிந்தித்தார். அதன் விளைவே அவர் எழுதிய நண்பர்க்கு, தம்பிக்கு, தங்கைக்கு, அன்னைக்கு ஆகிய கடித இலக்கியங்கள். தமிழர்கள் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது அவற்றின் உள்ளடக்கமாக அமைந்தது. இந்தச் சமுதாய அக்கறை அவரை ஏனைய தமிழாசிரியர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. மாணவர்கள் மட்டுமன்றிப் பிறரும் அவர் அறிவுரைகளால் வாழ்ந்துள்ளார்கள். தங்கள் குடும்பச் சிக்கலைத் தெரிவித்து வழிகேட்டுக் கடிதம் எழுதியவர்கள் பலர். ஒருமுறை சூழ்நிலையால் வாழ்க்கையில் தவறிவிட்ட தன் மனைவியைக் கொன்றுவிடலாமா என்று தோன்றுவதாக ஒருவர் கடிதம் எழுதி அவருடைய அறிவுரையை நாடினாராம். அதற்கு மு.வ., அப் பெண்ணை மனைவியாக ஏற்க முடியாவிட்டாலும், இரக்கங்காட்டி வீட்டு வேலைக்காரி போலவாவது இருந்துவிட்டுப்போக அனுமதிக்கலாம் என்று பதில் எழுதினாராம். மு.வ.வின் எழுத்து வாழ்விக்கும் எழுத்து என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?அவருடைய தமிழ்ப்பணிகள் எல்லாம் காலத்திற்கு ஏற்பத் தமிழை வளர்க்கும் பணிகளாக அமைந்தன. திரு.வி.க.வால் எளிமைக் கோலம் பூண்ட தமிழ்நடையை எளிமையின் எல்லைக்குக் கொண்டுசென்றவர் மு.வ. எளிதில் புரியும் திருக்குறளுக்கு விளங்காத நடையில் உரைகண்டு பொதுமக்களுக்கு எட்டாத உயரத்தில் உரையாசிரியர்கள் அதனை ஏற்றி வைத்திருந்தார்கள். அவர் குறளுக்கு எளிய உரைகண்டு கையடக்கப் பதிப்பாக வெளியிட்டு அதனை எளியவரும் கற்கும்படி ஆக்கினார். சராசரித் தமிழ் மக்களுக்குப் புரியாமல் இருந்த சங்கப்பாடல்களை விளக்கிப் புரியும் தமிழில் கட்டுரைகளாக வடித்து, விருந்து என்ற பெயரிலும், செல்வம் என்ற பெயரிலும் வழங்கினார். அவர் காலத்தில் வளர்நிலையில் இருந்த இலக்கியத் திறனாய்வுப் போக்கில் சிலப்பதிகாரம் குறித்து, இளங்கோவடிகள், கண்ணகி, மாதவி ஆகிய நூல்களை எழுதினார். இவை பண்டை இலக்கியங்களைப் பரப்புதற்கு மேற்கொண்ட ஆக்கப் பணிகள். இலக்கியத் திறனாய்வும் மொழியியலும் அவர் காலத்தில்தான் தமிழில் புதிய துறைகளாகத் தோற்றம் கொண்டன. அவற்றின் வளர்ச்சிக்காக. இலக்கியத் திறன், இலக்கிய மரபு, இலக்கிய ஆராய்ச்சி, எழுத்தின் கதை, மொழியின் கதை, மொழி வரலாறு, மொழிநூல், மொழியியற் கட்டுரைகள் முதலியவற்றை எழுதினார். இவை புதிய துறைகளில் தமிழ் வளர்வதற்கு ஆற்றிய அரும்பணிகள். இலக்கிய உலகில் மு.வ. பெற்ற தனிச் சிறப்புக்குக் காரணம் அவரது படைப்பிலக்கியத் திறனே. ஆங்கில இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர் மு.வ. அதன் பயனாக ஆங்கில இலக்கியப் போக்குகளைத் தமிழில் புகுத்தும் முயற்சியிலும் தலைப்பட்டார். நாவல், சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய வகைகளில் தம் படைப்பாற்றலைச் செலுத்தினார். சிறுகதையில் பெரிய வெற்றியைப் பெறமுடியவில்லை. நாடகத்தில் ஓரளவே வெற்றி கண்டார். ஆனால், நாவல் இலக்கியத்தில் தனித்தடம் பதித்தார். அவரைத் தமிழ் வகுப்பறைகளிலிருந்து தமிழர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவை அவருடைய நாவல்களே. பொதுவாக ஆசிரியர் கூற்றாகவே நாவல்கள் அமையும். ஆங்கில நாவல்களில் பாத்திரங்களே கதை சொல்லுவதாக அமைந்திருப்பது கண்ட மு.வ., "கள்ளோ காவியமோ' என்னும் நாவலை மங்கையும் அருளப்பரும் மாறி மாறிச் சொல்வதாகப் படைத்தார். கதைத் தலைவனின் நண்பன் வேலய்யன் கதையைச் சொல்வதாக அகல்விளக்கினைப் படைத்தார். ஆசிரியர் கூற்றாகக் "கயமை' நாவலை அமைத்தார். கள்ளோ காவியமோ, நெஞ்சில் ஒரு முள், அகல் விளக்கு, வாடா மலர், அல்லி, கயமை, கரித்துண்டு முதலிய நாவல்களைப் படிக்காத தமிழ் மாணவர்களோ, சுவைஞர்களோ சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் இல்லை என்றே சொல்லலாம். அந்த நாளில் இந்த நாவல்களைப் பலர் திருமணங்களில் பரிசாக வழங்கி வந்தனர். சிலர் சொல்வதுபோல் அவருடைய படைப்புகள் நாவல் இலக்கணத்திற்கு முற்றிலும் பொருந்தாமல் இருக்கலாம். ஆனால் அவை நன்னெறி காட்டி இளைஞர்களைத் திருத்துவன; சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வுகாட்டுவன. இல்லறத்தைத் தொடங்கும் காதலர்கள் பிறர் என்ன கருதுவார்களோ என்று எண்ணாமல், ஒருவர்க்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்தல் வேண்டும், இல்லையென்றால் பிரிந்து தொல்லைப்பட நேரிடும் என்னும் அறிவுரையை வழங்குவது கள்ளோ காவியமோ. உணர்ச்சிக்கு முதன்மை தாராமல் அறிவு வழி வாழ்ந்தால் வாழ்க்கை முற்றும் துளசியைப்போல் மணமுடையதாக அமையும், உணர்ச்சி வயப்பட்டு வாழ்ந்தால் ஒருபகுதி அழகாக அமைய, ஏனைய பகுதிகள் வெறுக்கத்தக்கனவாய் அரளிச் செடிபோல் ஆகிவிடும் என்று இளைஞர்களுக்கு எச்சரிக்கையூட்டுவது அகல்விளக்கு. முறையற்ற வேகம் வாழ்க்கையைக் கெடுத்துவிடும் என்னும் உண்மையை உணர்த்துவது வாடாமலர். ஒருவனோடு வாழும்போது மற்றொருவனை எண்ணாமல் அவனுக்கு நேர்மையாக நடந்துகொண்டால் அதுவே "கற்பு' என்று வாழ்க்கையை இழந்தவர்களுக்கும் வாழ வழி காட்டுவது கரித்துண்டு. அவர் நாவல்கள் பொழுதுபோக்கு நாவல்கள் மட்டுமல்ல பழுதுபார்க்கும் நாவல்கள். அவர் கலை கலைக்காகவே என்று கருதாமல் கலை வாழ்க்கைக்காகவே என்னும் கருத்தில் வேரூன்றி நின்றவர். அவர் எழுத்துகளில் உருவான அல்லி, மங்கை, பாவை, தேன்மொழி, வளவன், எழில், நம்பி போன்ற பெயர்களை அன்றைய பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழ்ந்ததே அவர் நாவல்கள் பெற்ற வெற்றிக்குச் சான்றாகும். அவர் நாவல்களின் சிறப்பை விளக்கும் நிகழ்ச்சி ஒன்று. மு.வ., மயிலை மாணிக்கஞ்செட்டியார், அவர் மைந்தர் மா. சம்பந்தம் போன்றவர்களோடு வடநாட்டுச் சுற்றுலா மேற்கொண்டார். அப்போது காஷ்மீரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவரும் மா. சம்பந்தமும் அறியாமல் ராணுவப் பாதுகாப்பு எல்லைக்குள் சென்றுவிட்டனர். உடனே காவலர்கள் இருவரையும் ராணுவ அதிகாரிமுன் அழைத்துச் சென்று நிறுத்திவிட்டார்கள்.தமிழரான ராணுவ அதிகாரி பெயரைக் கேட்டுள்ளார். மு.வரதராசன் என்று தெரிவித்தவுடன் இருக்கையிலிருந்து எழுந்து, நாவல்கள் எழுதும் மு.வ.வா? என்றவாறு வணங்கினாராம். பின்னர் சிற்றுண்டி அளித்து வண்டியில் ஏற்றி அவர்கள் இருந்த இடத்திற்கு அனுப்பிவைத்தாராம். அவர் எழுத்து அவரைக் காத்ததோடு சில நாள்களாய்த் தமிழ்நாட்டு இட்லியைக் காணாமல் இளைத்துப் போயிருந்த வாய்க்கு இனிய உணவையும் ஈட்டித் தந்துவிட்டது.வள்ளுவமும் காந்தியமும் அவர் கைக்கொண்ட நெறிகள். அவர் பகவத் கீதையை தூற்றாமலே திருக்குறளைப் போற்றியவர். அவர் திருக்குறளை நடத்தியவர் மட்டுமல்லர், அதன்வழி நடந்தவர். அவரைக் குறை சொன்னவர்கள் உண்டு. அவர் யாரைப் பற்றியும் குறை சொன்னதே இல்லை. மாணிக்கவாசகரிடத்தும் தாயுமானவரிடத்தும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆழ்வார்கள் நாயன்மார்கள் அருளிய பாடல்களைப் பலகால் ஓதி ஓதி உள்ளத்தைப் பண்படுத்திக்கொள்ள வேண்டும் என்றவர். ஆனால், திருத்தலங்களுக்குச் செல்வதிலோ, சமயச் சின்னங்களை அணிந்துகொள்வதிலோ விருப்பம் இல்லாதவர். தேசியத்தை மறவாத தமிழ்ப்பற்றும், இறைப்பற்றை இகழாத சீர்திருத்தமும், பிறர் மனதைக் காயப்படுத்தாத எழுத்தாற்றலும் அவருடைய சிறப்பு இயல்புகள். தம் புகழ்கேட்க நாணிய சான்றோர் அவர். முனைவர் பட்டம் பெற்றபோது, திருப்பத்தூரில் பாராட்டு விழா எடுக்க முயன்றனர். தாம் அப் பட்டம் பெற்றது "நான்காம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புக்குப் போவது போன்ற ஒரு செயல்தான்' என்று தெரிவித்து அதனைத் தவிர்த்தார். தமிழக அரசு இயல்தமிழ் விருது வழங்கியபோது அவரிடம் மாணவர்கள் கூட்டமாகச் சென்று பாராட்டு விழா எடுக்க இசைவு கேட்க, "இத்தனை பேர் வந்து பாராட்டியதே போதும், காலத்தை வீணாக்க வேண்டா' என்று கூறி மறுத்துவிட்டார். அவ்வாறே மணிவிழா எடுக்க மாணவர்கள் முயன்றபோதும் கண்டிப்போடு கடிதம் எழுதித் தடுத்துவிட்டார். அவர் தூய வாழ்வு வாழ்ந்த கொள்கைவாதி. வாழ்நாள் முழுவதும் வெந்நீர் பருகாதவர். ரஷியா சென்றிருந்தபோது குளிர் தாங்காமல் வாடினார். அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்தவர்கள் குளிரைத் தாங்க மது அருந்துமாறு வற்புறுத்தினார்கள். மறுத்துவிட்டார். தேநீர் அருந்துமாறு வேண்டினார்கள். வேண்டா என்று ஒதுக்கிவிட்டார். வெந்நீராவது பருகுங்கள் என்றார்கள். தாம் வெந்நீர் அருந்துவதில்லை என்று தம் கொள்கையைத் தெரிவித்தார். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தபோது, ""எனக்கு உதவுவதாயின், இன்னும் ஒரு போர்வை கொடுங்கள்'' என்று கூறிப் பெற்று அதனைப் போர்த்திக்கொண்டு உறங்கினார். இந்தக் கொள்கை உறுதியோடு அவர் தம் வாழ்க்கை முடிவினை எதிர்கொண்டார். அவர் இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால் தம் பிள்ளைகள் மூவரும் ஆங்கில மருத்துவம் பயின்றிருந்தும் அவர் அதனை ஏற்க மறுத்தார். அவர் அதனை ஏற்றிருந்தால் ஒருவேளை இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்பது பலரது கருத்து. அவர் கால்கள் எந்த அரசியல் தலைவர் வீட்டையும் நோக்கி நடந்ததில்லை. ஆனால், அவரை நாடி அவர் வீட்டுக்கு எல்லாக் கட்சித் தலைவர்களும் வந்தார்கள். அவர் பெரும்பதவிகளை நாடிச் செல்லவில்லை. பதவிகளே அவரை நாடி வந்தன. அவர் இறுதிச் சடங்கில் காமராஜர், அன்பழகன், எம்.ஜி.ஆர். போன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர் என்பதே அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அறிஞர் என்பதனைக் காட்டும்.வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்போல் புகழையும் கொண்டாட்டத்தையும் வேண்டாத அவரை நாடிப் புகழ் குவிந்தது. உலகம் நூற்றாண்டு விழாக் கொண்டாடி அவரை நினைவுகூர்கிறது. இராமன் சொல்லையும் மீறி அவனுக்குத் தொண்டு செய்த இலக்குவன் செயல் அவன் அண்ணன்மீது கொண்ட அளவற்ற அன்பினைக் காட்டுவதுபோல், மு.வ.வின் கருத்துக்கு மாறாக எடுக்கப்படும் இந்த விழாக்கள் தங்கள் ஆசிரியர்மீது மாணவர்கள் கொண்ட அளவற்ற அன்பினை வெளிப்படுத்துகின்றன. அகல் விளக்கு எழுதிய மு.வ.வும் ஓர் அகல்விளக்கே. அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக உழைப்பே திரியாக ஒளி தந்த விளக்கு அது. அதன் ஒளி எங்கும் பரவட்டும்.

(இன்று மு.வ. நூற்றாண்டு நிறைவு தினம்)


கட்டுரையாளர் :  திரு.தெ. ஞானசுந்தர்

ஆறாவது ஊதியக் குழு அமுல்படுத்தியத்தில் ஒரு சில பிரிவு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கான காரணங்கள்.

ஆறாவது ஊதியக் குழுவின் அமுல்படுத்தியத்தில் ஒரு சில பிரிவுஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கான காரணங்கள் - அதற்கான அரசாணைகள் மற்றும் விளக்கங்கள் வரிசையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
* ஊதிய குறை தீர்க்கும் பிவிற்கு அனுப்ப வேண்டிய மாதிரி படிவம்.

நன்றி :  http://tnkalvi.blogspot.in/

சிறப்பு பி.எட் படிப்பும், பொது பி.எட் படிப்புக்கு சமமானதே: அரசு-25-04-2012

சென்னை:
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் வழங்கப்படும் சிறப்பு பி.எட்., படிப்பை பொது பி.எட்., படிப்போடு இணையாக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பி.எட்., படிப்பில், பார்வையற்ற குழந்தைகள் உள்ளிட்ட சிறப்புக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில், சிறப்பு பாடத்திட்டம் உள்ளது.
இந்த சிறப்பு பிரிவைத் தேர்வுசெய்து, பி.எட்., படிப்பவர்கள், பொது பி.எட்., பொதுக் கல்வி பாடத்திட்டத்திற்கு இணையாகக் கருதப்படாமல் இருந்து வந்தனர். இதனால், அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளிலும் இடம் இல்லாத நிலை இருந்தது.
இந்நிலையில், சிறப்பு பி.எட்., பாடப்பிரிவை பயில்பவர்களை, பொது பி.எட்., பாடத்திட்டத்திற்கு இணையானவர்களாக அறிவிக்க வேண்டும் என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கல்லூரியின் பதிவாளர், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.
இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் தலைமையிலான குழு (ஈக்வலன்ட் கமிட்டி) கூடி, சிறப்பு பி.எட்., பாடத்திட்டத்தை ஆய்வுசெய்து, &'ரெகுலர் பி.எட்., பாடத்திட்டத்திற்கு, சிறப்பு பி.எட்., பாடத்திட்டம் இணையானது&' என, தமிழக அரசுக்கு தெரிவித்தது. இதை ஏற்று, சிறப்புக் கல்வியில் பி.எட்., பட்டம் பெறுபவர்களும், பொது பி.எட்., பட்டம் பெறுபவர்களும் சம நிலையான கல்வித் தகுதியைக் கொண்டவர்கள் என, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இனி, சிறப்புக் கல்வியில் பி.எட்., பட்டம் பெறுபவர்களும், அரசு வேலை வாய்ப்புகளைப் பெற தகுதியானவர்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

G.O.(Ms).No.56 Higher Education (K2) Department Dated: 24.4.2012.

Monday, April 23, 2012


இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் பதவி உயர்வின் பொதுதனி ஊதியம் ரூபாய் . 750 மற்றும் சிறப்பு படி ரூபாய். 500 பதவி உயர்வின் பொது அடிப்படை ஊதியத்தோடு எடுத்துக்கொள்ளப்பட்டு பதவி உயர்விற்கு பின் அனுமதிக்கப்படாது - விளக்கக் கடிதம் அரசு வெளியீடு.


தமிழ்நாடு திருத்திய ஊதிய விகிதங்கள்,2009 - இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தில் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.500/- சிறப்புபடிக்கு மாற்றாக ரூ.750/- தனி ஊதியம் 01-01-2011 முதல் அனுமதித்து ஆணையிடப்பட்டது - தனி ஊதிய நிர்ணயம் குறித்து தெளிவுரைகள் வழங்கக் கோரல் - தொடர்பாக

click here to download Letter No. 8764 April 18, 2012  

பல்கலைக்கழகங்களில்(தொலைத்தூரக்கல்வி) வாயிலாக பயிலும் இரட்டைப் பட்டங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ள விளக்கம்.

Sunday, April 22, 2012

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதத்தில் நடைபெறாது.

முப்பருவ மற்றும் தொடர் மதீப்பீட்டு முறைக்கான பயிற்சி மே மாதத்தில் நடைபெறும் என பரவலாக பேசப்பட்டு வந்தது. அதே சமயம் ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகத் (தொலைத்தூர கல்வி)  தேர்வு மற்றும் விடுமுறை காரணங்களுக்காக தள்ளி வைக்க ஆசிரியர்களின் சார்பில் பல்வேறு தரப்பு  அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது. 
இது குறித்து மாநில அளவில் முப்பருவ மற்றும் தொடர் மதீப்பீட்டு முறைக்கான பயிற்சியில் பங்குபெற்ற ஆசிரியர் ஒருவர் கூறுகையில் ஊராட்சி ஒன்றிய / அரசு பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கு மே மாதத்தில் பயிற்சி கிடையாது எனவும், அதே சமயம் மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கு மே மாதத்தில் பயிற்சி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வி செயலர் பயிற்சி அரங்கில் தெரிவித்தாக கூறினார்.
மேலும் 25.04.2012 அன்று முப்பருவ மற்றும் தொடர் மதீப்பீட்டு முறை சம்பந்தமாக அறிமுகப்பயிற்சி  RESOURCE PERSON TRAINING ஒரு நாள் நடைபெறும் என்றும், தொடக்க / அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 1 முதல் 5 வகுப்பு நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு நாள் பயிற்சி 26.04.2012 மற்றும் 27.04.2012 ஆகிய இரண்டு கட்டங்களாக மாநில முழுவதும் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதை எதிர்த்து வழக்கு - அரசு பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
திண்டுக்கல் மாவட்டம் சானர்ப்பட்டி அருகே உள்ள மலைப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் திரு. எம். கோபால் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட மனுவில் கூறி இருப்பதாவது : - 
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கீழ் ஏராளமான நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன.
இது போன்ற தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை பி.எட்., முடித்துள்ள இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்ப கடந்த 2007ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பி.எட்., முடித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் பலருக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சில ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகு காலிப்பணியிடங்கள் இல்லை என்று கூறி மீண்டும் இடைநிலை ஆசிரியர்களாக நியமித்துள்ளனர். 
இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. 2011 - 2012 கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் 1485 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. அரசானை ப்படி அப்பணியிடங்கள் பி.எட்., முடித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் கொண்டு நிரப்ப வேண்டும். ஆனால் அப்பணியிடங்கள் நேரடியாக நிரப்ப உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை 23.01.2012 அன்று அறிவிப்பு வெளியிட்டது. அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதுபோன்று நேரடியாக நிரப்பும் பட்சத்தில் எங்களுக்கு பதவி உயர்வு கிடைக்காமல் போய்விடும். பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் நடவடிக்கை 2007 ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிராக உள்ளது. 
எனவே அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நேரடியாக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ரத்து செய்ய வேண்டும்.
நேரடியாக ஆசிரியர்கள் தேர்வு செய்ய தடை விதிக்க வேண்டும். பி.எட்., முடித்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் அந்த பணியிடங்கள் நிரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதே போன்று மதுரை, விருது நகர், தேனி, கரூர், புதுகோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மேலும் 17 இடைநிலை ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். 
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் எம்.அஜ்மல்கான், கே.அப்பாதுரை ஆகியோர் ஆஜாராகி வாதாடினர்.
மனுக்களை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் 18 பேருக்கும் தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக வைத்திருக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குனர், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோருக்கு பதிலளிக்க நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கொள்கை விளக்க குறிப்பு வெளீயீடு

ஊதிய குறை மற்றும் முரண்பாடுகள் தொடர்பான கோரிக்கைகள் அளிப்பது குறித்து அரசு அறிவிப்பு

ஊதிய குறை மற்றும் முரண்பாடுகள் தொடர்பான கோரிக்கைகள் அளிப்பது குறித்து அரசு அறிவிப்பு

வழக்கு தொடர்ந்த தொடராதா தனி நபர், துறைத்தலைவர் மற்றும் சங்கங்கள் மனுக்களை அளிக்க தங்கள் விவரங்களை பதிவு செய்ய அரசு அறிவிப்பு .

சூதாட்டமல்ல, இது வாழ்க்கை! உரத்த சிந்தனை, மனுஷ்ய புத்திரன்




கடந்த வாரமும், ஒரு பல்கலைக்கழக மாணவி தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார். மாணவர்களின் இந்த தற்கொலைச் செய்திகளை படிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சட்டென, நம் பிள்ளைகள் யாரோ ஒருவரின் முகம் நினைவுக்கு வந்து விடுகிறது. அந்தப் பிள்ளைகளின் மனதில் என்ன இருக்கிறது என்ற பதட்டம் வந்து விடுகிறது. நாம் அவர்களை சரியாகத் தான் கவனித்துக்கொள்கிறோமா என, நாம் நிம்மதியிழந்து தவிக்கத் துவங்கிவிடுகிறோம்.


உண்மையில் இன்றைய இளைஞர்களைப் புரிந்துக்கொள்வது, அத்தனை எளிதானதா? இந்த தற்கொலைகள் நமக்குச் சொல்லும் செய்தியை, நாம் சரியாகப் புரிந்துக்கொள்கிறோமா? வாழ்க்கையை வாழத் துவங்கும்போதே, அதை முடித்துக் கொள்ளும் இந்தத் துயரம், மனம் கசியச் செய்வதாக இருக்கிறது. மரணத்தை முத்தமிட்ட அந்த களங்கமற்ற முகங்களை புகைப்படங்களில் பார்க்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வாழ்வின் எந்த துயரம், வாழ்வின் எந்த அவலம் அவர்களை இந்த முடிவை நோக்கித் துரத்தியது என்ற கேள்வி அலைக்கழிக்கிறது. ஒரு இளைஞனின் தற்கொலை என்பது, ஒரு தனிமனிதனின் அழிவு மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் அழிவு; ஒரு தலைமுறையின் அழிவு; ஒரு தேசத்தின், ஒரு சமூகத்தின் எதிர்கால நம்பிக்கையின் அழிவு. அவர்களை இந்த முடிவை எடுக்கத் தூண்டியதில் அல்லது அவர்களை அந்த முடிவிலிருந்து தடுக்கத் தவறியதில் நாம் எல்லாருக்கும், எங்கோ ஒரு மறைமுகமாக சிறிய பங்காவது, இருக்கத்தான் செய்கிறது. இந்த சமூகம், நமது இளைஞர்களுக்கு எதைத் தான் கற்பிக்கிறது? நமது கல்வி அமைப்புகள், அவர்களுக்கு எதைப் புரிந்து கொள்ள வைத்திருக்கிறது?


ஒரு மாணவரின் தற்கொலைக்கு, கல்விச் சூழல், குடும்பம், பொருளாதார நிலை, தனிப்பட்ட உறவுகள் என, நான்கு முக்கியக் காரணிகள் தூண்டுதலாக இருக்க முடியும். பல்வேறு சமூக பொருளாதார மாற்றங்களால், இன்று கல்வி பரவலாக்கப்பட்டு, சமூகத்தின் எல்லா மட்டங்களிலிருந்தும், உயர் கல்வியை நோக்கி ஏராளமானோர் வருகின்றனர். கற்பதற்கும் தடையாக இருந்த பொருளாதார, ஜாதியத் தடைகள் தகர்த்து எறியப்பட்டு விட்டன. ஆனால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்தும், பொருளாதார ரீதியாக ஏழ்மையான குடும்பங்களிலிருந்தும், உயர் கல்வியை நோக்கி வரும் மாணவர்கள், நகர்ப்புற மேல்தட்டு மாணவர்களுடன், பல்வேறு அடையாள சிக்கல்களைச் சந்திக்கின்றனர். ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் சமூக ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகள், ஆங்கிலம், நவ நாகரிக வாழ்க்கை முறை என, பல சிக்கல்களை கிராமப்புற மாணவர்கள் சந்திக்கின்றனர். இது அவர்களுக்கு, தாழ்வுணர்ச்சியையும், தனிமையுணர்ச்சியையும் கொண்டு வருகிறது.


இன்று உயர் கல்விக்கான செலவுகள், கடுமையாக அதிகரித்து விட்டன. பல குடும்பங்கள் குழந்தைகளின் கல்விக்காக, தங்களிடமிருக்கும் எல்லா நிதி ஆதாரங்களையும் பணயம் வைக்கின்றன. கடன்கள், எஞ்சியிருக்கும் சேமிப்புகள், சொத்துக்கள் என, பலவற்றையும் பயன்படுத்தியே பெரும்பாலான குடும்பங்களில், இன்று ஒரு மாணவனோ, மாணவியோ உயர் கல்விக்குச் செல்ல முடிகிறது. கல்விக் கட்டணங்கள் மட்டுமல்ல, மாணவர்களின் தனிப்பட்ட செலவுகளும், இன்று பன்மடங்கு அதிகரித்துவிட்டன. ஒரு குடும்பம், அதையும் தாங்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு, பெரும் பொருட்செலவில் ஆடப்படும், ஒரு சூதாட்டம் போல மாறிவிட்ட கல்வி அமைப்பில், மாணவர்கள் கடும் மன நெருக்கலுக்கு ஆளாகின்றனர். இன்னொரு புறம், கடுமையான பாடச் சுமை, போட்டி போட வேண்டிய நிர்பந்தம், போட்டியில் தோல்வியடைந்தால் தன் மீது, கட்டப்பட்ட மொத்த நம்பிக்கையும், சிதற வேண்டிய சூழல். இது, மாணவர்களை விபரீத முடிவுகளை நோக்கித் தள்ளுகிறது.


அடுத்ததாக, இன்றைய இளைஞர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் புதிய சுதந்திரங்களும், வாய்ப்புகளும், தேவைகளும் அவர்களை நிலைகுலைய வைக்கின்றன. பொறுப்புகளையும், கடமைகளையும் விட, கேளிக்கைகள், இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை பெருமளவு சூழ்ந்து கொண்டிருக்கின்றன. இணையம், அலைபேசி வழியாக, உறவுகளில் பல புதிய சாத்தியங்கள் இன்று உருவாகி இருக்கின்றன. போதை பொருள்களை பயன்படுத்துவது, இரவு நடனங்களுக்குச் செல்வது, சிறு, சிறு, வன்முறைகளில் ஈடுபடுவது என, பல வழிகளில் இன்று இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டாட விரும்புகின்றனர். இன்னொரு புறம், நவநாகரிக உடைகள், விதவிதமான எலக்ட்ரானிக் சாதனங்கள், உயர்தர உணவகங்கள் என, எண்ணற்ற தூண்டில்கள் இளைஞர்களை சுண்டி இழுக்கின்றன. பெரும் ஷாப்பிங் மால்களில் எதையும் வாங்காமல், எண்ணற்ற பொருள்களை உற்றுப் பார்த்தபடி நகரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கண்களை பார்க்கும்போதெல்லாம், அவர்களின் வேட்கையை எளிதாக புரிந்துக் கொள்ள முடியும். இவ்வாறு, ஆண், பெண் உறவுச் சிக்கல்கள் காரணமாகவோ, வேறு தேவைகள் காரணமாகவோ, ஏதேனுமொரு நெருக்கடியில் மாட்டிக் கொள்ளும் மாணவர்கள், அதிலிருந்து வெளியேற முடியாமல் தற்கொலையின் வழியே தப்பிக்க முயற்சிக்கின்றனர்.


காரணங்கள் எதுவாக இருந்தாலும், நாம் நம் இளைஞர்களை காப்பாற்ற வேண்டிய பெரும் சவாலில் இப்போது இருக்கிறோம். பெற்றோர், தங்கள் குழந்தைகளை பந்தயக் குதிரைகளாக மாற்றும் எண்ணத்தை முதலில் நிறுத்த வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு எது சாத்தியமோ, அதை அவர்கள் இயல்பாக அடைய அனுமதிக்க வேண்டும். அவர்கள் தோல்வியடையும் போது, அந்த தோல்விக்கு அப்பாலும், ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதில் அடைவதற்கு எவ்வளவோ இருக்கின்றன என்பதை, ஒவ்வொரு கட்டத்திலும், பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். தங்களால் அடைய முடியாததை எல்லாம், தங்கள் பிள்ளைகள் வழியே அடைய வேண்டும் என்று நினைப்பது, மிகவும் இழிவான சுயநலம் அல்லவா? மேலும், இன்றைய இளைஞர்களின் ஆசாபாசங்களை பெருந்தன்மையுடனும், அறிவுணர்ச்சியுடனும் புரிந்துக்கொள்ள முன் வரவேண்டும். தங்களது போலி ஒழுக்க மதிப்பீடுகளால், அவர்களை அச்சுறுத்துவதால், எந்த பயனும் இல்லை. ஒவ்வொரு கட்டத்திலும், அவர்கள் தங்களை மீட்டுக் கொள்ள பெற்றோர் உதவ முடியும். இதில், ஆசிரியர்களின் பங்கு மிகவும் மகத்தானது. தங்கள் முன் அமர்ந்திருக்கும் இளைஞனின் மூளைகளை மட்டுமல்ல, இதயங்களைத் தொட அவர்கள் முயற்சிக்க வேண்டும். இளைஞர்களின் இதயத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துவது மிகவும் சுலபம். இந்த வாழ்க்கையை எந்த சூழலிலும் எதிர்க்கொள்வதற்கான புரிதலையும், மனோதிடத்தையும் அவர்கள், மாணவர்களிடம் ஏற்படுத்த முடியும்.


எந்தத் தோல்விக்கும், ஆசாபாசத்திற்கும் இடையிலும் வாழ்வின் மகத்துவத்தை, அவர்கள் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். அத்தகைய ஒரு மகத்தான பணியை இன்று, எந்த ஆசிரியர் செய்கிறாரோ, அவர் கடவுளுக்கு நிகரானவர். இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சொல்ல ஒன்று இருக்கிறது. நீங்கள் தான் இந்த உலகின் அச்சு. நீங்கள் தான் இந்த வாழ்க்கையின் மையம். பணம், உறவு முறிவுகள், தோல்விகள் எல்லாமே, வாழ்க்கையில் வரும் சிறு இடைவேளைகள். இடைவேளைக்குப் பிறகே, உங்கள் வாழ்க்கையின் மகத்தான திருப்பங்கள் காத்திருக்கின்றன. நீங்கள் இன்று ஏதோ ஒன்றில் தோல்வியடைவது, இதைவிட மகத்தான ஒன்றை அடைவதற்கே! நீங்கள் மலை மீது எரிய வேண்டிய பெரு நெருப்பு; மின்மினிகள் போல மறையலாமா? 


email: manushyaputhiran@gmail.com


- மனுஷ்ய புத்திரன், பத்திரிகையாளர், சிந்தனையாளர்




Thursday, April 19, 2012

தமிழகத்தில் பாலிடெக்னிக்- இன்ஜி.,உள்பட 20 கல்லூரிகள் திறக்க முடிவு; ஜெ., அறிவிப்பு



சென்னை: 
தமிழகத்தின் பல இடங்களில் பொறியியல், கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குள் துவங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: பள்ளிப் படிப்பை நிறைவுசெய்யும் கிராமப்புற மாணவர்கள், வெளியூர் சென்று உயர்கல்வி(கல்லூரிப் படிப்பு) கற்பதில் பலவித சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, அவர்களில் பலர் பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொள்கின்றனர். இந்த நிலையை மாற்றும் வண்ணம், இந்த அரசு பொறியியல், மருத்துவம், கலை-அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளை தமிழகத்தின் பல மாவட்டங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் துவக்கி வருகிறது.
கடந்த 2011-12 கல்வியாண்டில், மொத்தம் 11 பல்கலைக்கழக உறுப்பு கலை-அறிவியல் கல்லூரிகள் துவக்கப்பட்டன. தேனி மாவட்டம் போடியில், ஒரு அரசு பொறியியல் கல்லூரி துவங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சட்டசபையில் ஜெ., இது தொடர்பான அறிவிப்பில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் 20 கல்லூரிகள நடப்பு கல்வியாண்டில் திறக்கப்படவிருக்கிறது

 அரசு பொறியியல் கல்லூரிகள்:

1. தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை ஊராட்சி
2.தஞ்சை வட்டம் செங்கிப்பட்டி

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்

1.திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம்
2.புதுகை மாவட்டம் கந்தர்வக்கோட்டை
3. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம்
4.ஈரோடு மாவட்டம் பெருந்துறை
5.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை
6.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை 
7.அரியலூர் 
ஆண்-பெண் இருபாலரும் படிக்கக்கூடிய, பல்கலைக்கழக உறுப்பு கலைக்கல்லூரிகள் 
1. கன்னியாகுமரி
2.திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர்
3.சேலம் மாவட்டம் எடப்பாடி
4.பரமக்குடி, 
5.நெல்லை மாவட்டம் கடையநல்லூர்
6. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி
7.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை
8.மதுரை மாவட்டம் திருமங்கலம்
9.சென்னை அருகே 
அரக்கோணம் 

10.சென்னை அருகே திருவொற்றியூர்
11. நாகப்பட்டிணம் 

இத்தகவலை, இச்சபையில் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

தலையங்கம்: ஒரு சோறு பதம்

தமிழ்நாட்டில் கல்வித்துறை எந்த அளவுக்குச் சீர்கேடு அடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையும் அதில் கிடைத்துள்ள சான்றுகளுமே போதுமானவை. ஒரு தனியார் பள்ளியில், பொதுத் தேர்வில் பலரும் முறைகேடாகத் தேர்வு எழுதி வருவதாக மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவுக்கு மின்அஞ்சல் வந்ததையடுத்து, அவர் திடீர் ஆய்வு நடத்தியதில் கிடைத்த சான்றுகள் அதிர்ச்சி தருபவை.

 கணிதத் தேர்வு வினாக்களுக்கான விடைகளை அலுவலகத்தில் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருக்கிறார் ஒருவர். 20 பிரதிகளை ஆட்சியர் கைப்பற்றுகிறார்.
 8 தேர்வு அறைகளின் கண்காணிப்பாளர்களிடம் கணித வினாக்களுக்குரிய விடைகளின் துண்டுத்தாள் (பிட்) இருக்கிறது. எப்படி வந்தது? பதில் இல்லை. எந்த மாணவர்களிடமிருந்து பறிமுதல் செய்தீர்கள்? பதில் இல்லை.
 8 ஆசிரிய-ஆசிரியைகளின் செல்போன்களிலும் தேர்வு நேரத்தில் ஏராளமான அழைப்புகள் பதிவாகியிருந்தன.
 ஓர் ஆசிரியரின் சட்டைப்பையில் மாணவரின் பெயர், தேர்வு எண், ரூ.200 பணம் இருந்துள்ளது.
 அதிர்ச்சி அளிக்கும் இந்தச் சம்பவத்தில் இந்தத் தனியார் பள்ளிக்குத் துணை போய் இருப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!
 இத்தகைய முறைகேடுகள் முதலில் அரசுப் பள்ளிகளில்தான் மிகச் சிறிய அளவில், யாருக்கும் பாதிப்பில்லை என்ற அளவில் தொடங்கின. கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வகுப்புக்கே வராமலும், (எஸ்எம்எஸ் வருகைப் பதிவு என்பது இன்னொரு மோசடி) பாடம் நடத்தாமலும், பேருந்து நேரத்துக்கு ஏற்ப வகுப்புகளை ஆசிரியர்கள் "கட்' அடித்துவிட்டுப் போவதும் நடந்துகொண்டிருக்கின்றன.
 கற்பித்தல் பணியில் ஆசிரியர்களின் உழைப்பு இல்லாவிட்டால், மாணவர்கள் மட்டும் எப்படி மதிப்பெண் பெற முடியும்? மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், எந்தப் பாடத்தில் தேர்ச்சி குறைந்துள்ளதோ அந்த ஆசிரியருக்கு இடமாற்றம் வரும். ஆகவே, ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளை மட்டும் ஆசிரியர்களே சொல்லிக் கொடுத்துவிடுவது வழக்கமாக இருந்தது. இந்த விடைகளில்கூட எது சரி என்று தெரியாமல், செல்போன் மூலமாக வேறொரு ஊரில் தேர்வு அறையில் உள்ள ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து, சொல்லும் வழக்கமும் இங்கேதான் தொடங்கியது.
 செல்போனில் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கு மட்டுமே விடை கேட்டு வாங்கி, மாணவர்கள் 40 விழுக்காடு பெற்று தேர்ச்சி பெறச் செய்வதால், இவர்கள் சிறந்த மாணவர்களுக்குப் போட்டியே இல்லை என்பதால், இதனை மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவற்றைக் கண்டும் காணாமல் இருந்தார்கள். இத்தகைய முறைகேடுகள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், அரசியல்வாதிகளின் பினாமிகள் நடத்தும் தனியார் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே நடக்கத் தொடங்கிவிட்டன.
 பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளிலும் இதே முறைகேடுகள்தான். கண்காணிப்பாளருக்கு பிரியாணி மற்றும் கவர் உண்டு. இதில் தனியார் பள்ளிகளில் சிறப்பாகக் கவனித்தால், அரசுப் பள்ளிகளில் அதன் தரத்துக்கேற்ப கவனிக்கிறார்கள்.
எங்கே நேர்மையும் ஒழுக்கமும் கற்றுத் தரப்பட வேண்டுமோ, அங்கே ஊழலும் முறைகேடுகளும் அரங்கேற்றப்பட்டன.

 வேதியியல் செய்முறைத் தேர்வில், பாக்கெட்டைத் திறந்தால் ஆய்வு செய்ய வேண்டிய உப்பின் பெயர் எழுதியிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். எல்லா மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வில் 40-க்கு மேல்தான் இருக்க வேண்டும் என்பதில் கவனமாகச் செயல்படுகிறார்கள். தனியார் பள்ளிகளில் 50-க்கு 50 கொடுத்து, எழுத்துத் தேர்வில் இன்னும் கூடுதல் மதிப்பெண் காட்டப் பார்க்கிறார்கள்.
 இதிலும்கூட, ""மாணவர்கள் பாவம், இதில் மதிப்பெண் வாங்கியாகிலும், எழுத்துத்தேர்வில் குறையும் மதிப்பெண்ணை ஈடுசெய்துகொள்ளட்டும்'' என்று கல்வி அதிகாரிகளும் இரக்கம் காட்டுகிறார்கள். இதிலெல்லாமா கருணை காட்டுவது? பிறகு கல்வியின் தரத்தைப் பற்றி பேச முடியுமா?
 இப்போது மாணவர்கள் தேர்ச்சி மட்டுமே பள்ளிகளின் குறிக்கோளாக இல்லை. 100 விழுக்காடு பெற்று, தலைசிறந்த பள்ளி என்பதைக் காட்டிக் கொள்வதற்கான முறைகேடாக இது தனியார் பள்ளிகளில் நுழைந்திருக்கிறது. காரணம் என்ன? தங்கள் புகழைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், கணிதப் பாடத்தில் தமிழக மாணவர்கள் அனைவரும் திணறியபோது எங்கள் பள்ளி மாணவர்கள் 100-க்கு 100 வாங்கிவிட்டார்கள் என்று பெருமை பேச வேண்டும். அதற்காக எந்தவித முறைகேடுக்கும் தனியார் பள்ளிகள் தயாராகிவிட்டன. கல்விக் கட்டணத்தை மிக மிக அதிகமாக உயர்த்தவும் அதை நியாயப்படுத்தவும் இவை அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றன.
 அப்படியானால், உண்மையாகவே படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் கணிதத் தேர்வில் 100 மதிப்பெண் பெறமுடியாதவர்களாக இருக்க, யார், யாரோ 100 விழுக்காடு மதிப்பெண் பெறுவார்கள். இது எத்தகைய கீழ்த்தரமானது என்பதைக் கல்வி நிறுவனங்களோ அல்லது கல்வித் துறையோ சிந்திக்கவே இல்லை.
 இவர்களது வியாபாரப் போட்டியில் இவர்களது பந்தயக் குதிரை வெற்றி பெற எந்த முறைகேட்டிலும் ஈடுபடுவார்கள். இதற்கு கல்வித் துறை அதிகாரிகளின் அலட்சியமும், அரசியல்வாதிகளின் ஆதரவும்தான் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 இந்த முறைகேட்டுக்குத் துணைபோயிருக்கும் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இவர்களுக்காக ஆசிரியர் உலகம் போராடும் என்பதுதான் அதைவிடக் கேவலமான அவலம். ஆசிரியர் தொழிலுக்கே இழுக்குத் தேடித் தந்திருப்பவர்களைத் தங்களது சக ஆசிரியர்கள் என்று சகதாபத்துடன் பார்ப்பவர்கள்தான் அதனினும் இழிந்தவர்கள் என்று யார் அவர்களுக்குப் புத்தி புகட்டுவது?
 ஆசிரியர்களும் அவர்களது குடும்பங்களும் தமிழ்ச் சமூகத்தின் அங்கமல்லாமல் போய் விடுவார்களா? இப்படியே போனால், தமிழ்ச் சமூகம் என்ன ஆகும்? வினை விதைத்தவன் வினை அறுப்பான், வேறென்ன?

Wednesday, April 18, 2012

14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு!

 தமிழகத்தில் தொடக்க பள்ளி, இடைநிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 14 ஆயிரத்து 349 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவபதி கூறினார். சட்டசபையில் இன்று நடந்த பள்ளி கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது அவர் மேலும் கூறியதாவது: 100 மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். 900 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். 22 ஆயிரத்து 400 மாணவ மாணவிகளுக்கு 320 பள்ளிகளில் ஒன்று மற்றும் 6ம் வகுப்பு வகுப்புகளுக்கு ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்படும் என்றார். மேலும் அவர்,
எட்டு மாவட்டங்களில் மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்று போக்குவரத்துவசதி செய்து தரப்படும். நூலகங்கள் மேம்படுத்தப்படும் என்றார்.